தலையாலங்காடு

தலையாலங்காடு:
                        தலையாலங்காடு எனும் கிராமம் "53.சிமிழி ஊராட்சி"யில் அமைந்துள்ளது.
                                      தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 93 வது தலமாக விளங்கும் திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் இங்குள்ளது. இது வரலாற்றுச் சிறப்பும், புராணச் சிறப்பும் மிக்க தலமாக விளங்குகிறது.


அமைவிடம்:
                                        இருப்புப் பாதை வழியில் செல்வோர் திருவாரூரில் இறங்கி, கும்பகோணம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் 14 கி.மீ. பயணித்தால், தலையாலங்காட்டை அடையலாம். சோழ சூடாமணி ஆற்றின் வடகரையில் 5 நிமிட நடைதொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து தொடருந்தில் வருபவர்கள், கும்பகோணத்தில் இறங்கி, 25 கி.மீ. தூரம் திருவாரூர் செல்லும் பேருந்தில் பயணித்தால் இத் தலத்தை அடையலாம்.

தொன்மை:
                       சங்க காலத்தில் இவ்வூர் "தலையாலங்கானம்" என்னும் பெயரில் விளங்கியது. (தலையாலங்கானப் போரும், தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் பெயரும் அனைவரும் அறிந்ததே.) 
              முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன் நடனமாடிய தலம்.
              சரஸ்வதி தேவிக்கு இறைவர் சோதிர்லிங்கமாகக் காட்சி வழங்கி அருள்பாளித்த திருத்தலம்.
              தலையாலங்கானத்துப் போர் தமிழக சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. பாண்டியன் நெடுஞ்செழியன், இங்கு நடைபெற்ற போரில் சோழனை வென்றதால் தலையாலங்கானத்துச் "செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்" எனப்பட்டான். 

தலத்தின் பெருமை:
                       ஆலங்காடு எனப்படும் தலங்களுள் இது முதன்மையானது எனக் கருதுவர்.             
                      இதனை, முக வடாரண்யம் என்று வடமொழியில் கூறுவர். 


திருச்சிற்றம்பலம்:

                       "கங்கை எனும் கடும் புனலைக் கரந்தான் தன்னைக்
                             காமரு பூம்பொழிற் கச்சிக் கம்பன் தன்னை
                      அங்கையினில் மான்மறி ஒன்று எந்தினானை
                              ஐயாறு மேயானை ஆரூரானைப் 
                      பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
                              பரிதிநியமத்தானைப் பாசூரானைச் 
                      சங்கரனைத் தலையாலங்காடன்தன்னைச்
                              சாராதே சால நாள் போக்கினேனே.
                                    திருச்சிற்றம்பலம்
                                                               --- திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்"
தீர்த்தம்:
                 கோயிலுக்கு எதிரில் உள்ள சங்க தீர்த்தம் தீராத பல நோய்களையும் தீர்க்க வல்லது. தோல் சம்பந்தமான நோய்கள் இதில்  நீராடியதால் நீங்கப்பெற்றதாகப் பலரும் கூறக் கேட்கலாம். அருகிலுள்ள செம்பங்குடியில் பல்லாண்டுகளுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஸ்ரீ காஞ்சி  காமகோடி மகா பெரியவர்கள், 48 நாட்கள் அதிகாலையில் இங்கு வந்து ஸ்நானம் செய்துவிட்டு, நர்தனபுரீஸ்வரர் சன்னதியைப் பதினொரு முறை வலம் வந்து தரிசிப்பார்களாம்.

               "சோழ சூடாமணி ஆறு", கோயிலுக்குத் தெற்கில் ஓடுகிறது. இதனைக் "கடுவாய் நதி" என்றும் அழைப்பர். இப்புனித நதியின் கரையில் பல சிவாலயங்கள் இருக்கக் காணலாம்.

தல விருக்ஷம்:

     வடக்குப் பிராகாரத்தில் உள்ள பழமையான "பலா" மரமே இத்தல விருக்ஷமாகக் கருதப்படுகிறது. 

புராண வரலாறு:


                   தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் ஆபிசார வேள்வி செய்து ஏவிவிட்ட முயலகனை அடக்கிய சிவபெருமான், அம்முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது. எனவேதான், சுவாமிக்கு நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. கிருத யுகத்தில் கபில முனிவர் பூஜித்து, தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியைப் பெற்றுக்கொண்டார். சரஸ்வதி தேவி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றாள்.

                  இக்கலியுகத்திலும் சங்குதீர்த்ததில் நீராடுபவர்கள், குன்மம், முயலகநோய், சித்தப்ரமை,வெண்குஷ்டம் முதலிய மகா ரோகங்களிளிருந்து  நிவர்த்தி பெறுகிறார்கள். 




வழிபட்டோர்:

                  கபில முனிவர், தாருகாவன முனிவர்கள், காளி, சனி பகவான், திருநாவுக்கரசு நாயனார் ஆகியோர். இத்தலத்திற்கு மிக அருகிலுள்ள குடவாயில், நாலூர் மயானம், பெருவேளூர்,கரவீரம் ஆகிய தலங்கள் திருஞானசம்பந்தரின் தேவாரத் திருப்பதிகங்களைப் பெற்றுள்ளதால், சம்பந்தப்பெருமான் தலையாலங்காட்டிற்கும் எழுந்தருளி, பதிகங்கள் பாடியிருப்பார். அதுபோலவே, அருகிலுள்ள ஊர்களான திருவாஞ்சியத்தையும், திருவாரூரையும் பாடியுள்ள சுந்தரரும் இத்தலத்து இறைவரைப் பாடியிருப்பார். நமது தவக்குறைவால், நமக்கு அப்பதிகங்கள் கிடைக்கவில்லை.




பிற செய்திகள்:
               ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் கடைசி இரு நாட்களும்,  தொடரும் சித்திரை மாதத்து முதல் இரு நாட்களும் விடியற்காலை  சூரியோதயத்தின் போது, சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது விழும்போது சூரியபூஜை நடத்தப்படுகிறது. 

             சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாம்பிகையின் மீது பாம்பு இருந்ததைப் பலரும் கண்டு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த போது,  அப்பாம்பு, தனது சட்டையை உரித்து அம்பாள் திருமேனியின் மீதே விட்டுவிட்டு மறைந்து விட்டது. இங்குள்ள பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி. தீராத பகைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர். எனவே, தேய்பிறை அஷ்டமியின்போது மக்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, நலம் யாவும் பெறுகின்றனர். செவ்வாய்க்கிழமைகளில் காளி தேவியை வழிபட்டு, திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் ஆகிய கோரிய வரங்களைப் பெறுகின்றனர். ஒரு காலத்தில் பெரிய ஊராக இருந்ததால், எஞ்சிய கோயில்களின் மூர்த்திகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.


கல்வெட்டுக்கள்:

                   தெற்கு ப்ராகாரச் சுவற்றிலும், வடபுறச் சுவற்றிலும் மகாமண்டப முகப்பிலும் உள்ள கல்வெட்டுக்கள் படி எடுக்கப் பட்டுள்ளன.ராஜராஜனின் ஆறாவது ஆண்டு ஆண்டில் அளிக்கப்பட தேவ தானங்களும் அருமை உடையார் குமாரன் செண்டானாதர் உடையார் மகாமண்டபம் கட்டித்தந்த செய்தியும், அம்பர் அருவந்தை அரயன் சிவதவனப் பெருமானான காளிங்க ராஜன் என்பவர்  இக் கற்றளியைத் திருப்பணி செய்த தகவலும் இக்கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.





பூஜைகளும் விழாக்களும்:

               இந்து அற நிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் காலையும் மாலையும் பூஜைகள் நடைபெறுகின்றன. பிரதோஷ பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. குளத்தங்கரை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை  நடக்கிறது. தவிரவும், தை அமாவாசையை முன்னிட்டு இரு தினங்கள் சுவாமி புறப்பாடாகி, சங்க தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்திரை மாத பௌர்ணமி, சித்திரை சதயத்தன்று அப்பர் குரு பூஜை, வைகாசி விசாகம், ஆடிப்பூரம்,ஆடி-தை வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு விசேஷ அலங்காரம்,விநாயக சதுர்த்தி, நவராத்திரி, ஸ்கந்த சஷ்டி,அன்னாபிஷேகம்,  கார்த்திகை தீபம், மார்கழி உஷக் கால பூஜை, மகர சங்கராந்தி, மகாசிவராத்திரி,  ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.




உள்ளூர்க் கோயில்கள்:
              மயிலம்மன், திரௌபதி அம்மன், ஐயனார்,காளி புத்தடி அம்மன் ஆகிய தெய்வங்களின் கோயில்களும் இவ்வூரில் இருக்கின்றன.

சுற்றிலும் உள்ள தலங்கள்:
                  இங்கிருந்து திருவாரூர் செல்லும் வழியிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் எண்கண் சிவாலயம் உள்ளது. இதிலுள்ள முருகன் சன்னதி பிரசித்தமானது. திருவாரூர் சாலையில் காப்பணாமங்கலமும்,அங்கிருந்து ஒரு கி. மீ. தொலைவில் கங்கா தேவி பூஜித்த  பெரும்பண்ணையூர்  கைலாசநாத சுவாமி ஆலயமும் உள்ளன. இதன் அருகில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற த்ரியம்பகபுரம் உள்ளது. திருவாரூர் சாலையில் இன்னும் சற்றுத் தொலைவில் சம்பந்தரும் அப்பரும் பாடிய பெருவேளூரும், கரவீரமும் அமைந்துள்ளன. வடகிழக்கில் நான்கு கி. மீ. தொலைவில், நால்வராலும் பாடப்பெற்ற ஸ்ரீ வாஞ்சியம் உள்ளது. கும்பகோணம் செல்லும் பாதையில் குடவாயில், நாலூர், நாலூர் மயானம் ஆகிய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. இன்னும் சற்றுத் தொலைவில் திருச்சேறையும், நறையூர் சித்தீஸ்வரமும் உள்ளன. சேங்காலிபுரம், ஓகை, பருத்தியூர், சிமிழி ஆகிய ஊர்களிலும் சிவாலயங்கள் இருக்கின்றன. தலையானங்கானத்துப் போருக்காக வில்லுக்கு நாண் தயார் செய்து கொடுத்த இடம் 'நாணல்சேரி' எனப்படுகிறது. இங்கு இரு சிவாலயங்கள் உள்ளன.


சமயப்பணி:
                 சமயப் பணி செய்யும் ஆர்வலர்களும் தல யாத்திரை செய்யும் அன்பர்களும் இக்கோயிலின் வளர்ச்சியில் பங்காற்றினால் ஆலயம் புதுப்பொலிவுடன் விளங்கி நன்கு பராமரிக்கப்பட ஏதுவாகும்.


சந்தய மாதா ஆலயம்:

      கிராமத்தின் மையத்தில் புனித சந்தய மாதா ஆலயம்  அமைந்துள்ளது.

அஞ்சல் முகவரி -

              அருள்மிகு. நடனேஸ்வரர் ஆடவல்லநாதர் திருக்கோயில்

                     தலையாலங்காடு

                     செம்பங்குடி அஞ்சல் - 612 603
                     குடவாசல் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.




அருகில் அமைந்துள்ள கிராமங்கள் :

அருகிலுள்ள நகரங்கள் :

  • திருவாரூர் - 14 கி.மீ
  • குடவாசல் - 6 கி.மீ
  • கும்பகோணம் - 25.கி.மீ.
  • நன்னிலம்
  • நாகப்பட்டிணம்
  • மயிலாடுதுறை.
மற்ற இடுகைகள் : 

பெரும்பண்ணையூர் சிமிழி காப்பணாமங்கலம்
சேங்காலிபுரம் புதுக்குடி அன்னவாசல்
பெருமங்கலம் மஞ்சக்குடி மூலங்குடி
அரசவணங்காடு வடகண்டம் மணக்கால்
காட்டூர் திருக்கண்ணமங்கை

Comments

Popular posts from this blog

சிமிழி

மணக்கால்

அன்னவாசல்